நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பயணச் செலவுகள் மிக மிகக் குறைந்த தொகையாய் இருப்பதைக் காட்டும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு பதிலளித்த ஜெயவீர, ஜனாதிபதி வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;
“கடந்த ஐந்து மாத காலப் பதவிக்காலத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஜனாதிபதி மிதிபலகையில் நின்று பயணம் செய்தால் கூட இத்தகைய குறைந்த செலவில் 3 நாடுகளுக்குப் பயணித்திருக்க இயலாது.
செலவுகளைக் குறைப்பது மட்டும் இலாபத்தை ஈட்டித் தராது என்று கூறிய ஜெயவீர, வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். வரவு செலவுத்திட்டப்படியான பாதீட்டுப் பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது? நமது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? என்பது பற்றிக் கூற வேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது” என்றார்.