Home இலங்கைபெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புகின்றனர்

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புகின்றனர்

by admin

 

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்பவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025, சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

அத்துடன் வடக்கு மாகாண பால்நிலைக் கொள்கையையும் வெளியிட்டு வைத்தார்.
இதன்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) சிரேஷ;ட தொழில்நுட்ப ஆலோகர் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது,

பெண்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதனால்தான் மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்ட கொள்கை ஆவணம் முக்கியமானது.

இன்று பெண்கள் சமூகத்தில் குறிப்பாக வேலைத் தளங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக பாடசாலைகளிலும் மாணவிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள்.ஊடகங்களைப் பார்க்கின்ற உங்களுக்கு நிச்சயம் இவை தெரிந்திருக்கும்.

எமது சமூகத்தில் தற்போது இடம்பெறும் சமூகப்பிறழ்வுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளாவதும் பெண்களே. உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான ஆண்களால் பல பெண்கள் துர்நடத்தை உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.சொந்தச் சகோதரிகளைக்கூட அவர்கள் இவ்வாறு துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவங்கள் வடக்கில் பதிவாகியுள்ளன.

வெளியில் இவற்றைச் சொன்னால் தமது எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சி பல பெண்கள் வெளிப்படுத்த தயங்குகின்றனர். இவற்றை முறியடிக்க வேண்டும். இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக வன்முறைகளிலோ, துர்நடத்தைகளிலோ ஈடுபடுவர்கள் தராதரம் பாராமல் தண்டிக்கப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மிக முக்கியமாக நாங்கள் ஒவ்வொரும் எங்களுக்கு உறுதிபூணவேண்டும். நாங்கள் ஒவ்வொருவரும் மாறினால் சமூகம் மாற்றமடையும். பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம் தானாகவே ஏற்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More