யாழ். தலைமைக் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் திலக் தனபாலவிளினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைக் காவல்நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவாகி இருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முறைப்பாட்டினை செய்தவர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்றதாக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமைக் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார். எனினும் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் தலைமைக் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் காவல்துறை குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இந்த விடயமானது நேற்றையதினம் மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாகியது.
இவ்வாறான பின்னணியில் குறித்த காவல்துறை அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

