Home இலங்கை மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது – நிலாந்தன்.

மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது – நிலாந்தன்.

by admin

 

உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு.சுத்திவர உப்புக்கடல்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது.

கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில் ஒரு முகப்பை நிறுவுகிறார்கள்.அல்லது தமது சுவரொட்டிகள் பதாகைகள் மூலம் அப்படியொரு வாசலை உருவாக்குகிறார்கள். அது தேசிய மக்கள் சக்தியின் வாசல் என்ற ஓர் உணர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த முகப்பில் வாசலைத் தவிர ஏனைய எல்லாப் பரப்புகளையும் சுவரொட்டிகளால் நிரப்புகிறார்கள்.

தமிழ்க் கட்சிகள் இந்த அளவுக்குக் காசைக்கொட்டிப் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை.பெரிய கூட்டங்களை நடத்துவதற்குச் சத்தியற்றவைகளாக தமிழ்க் கட்சிகள் காணப்படுகின்றன.

குறுகிய கால இடைவெளிகளுக்குள் வந்த,வருகின்ற மூன்று தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளிடம் பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நிதி இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி பெயராவிட்டால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. இது தமிழரசியலின் அடிப்படைப் பலவீனம் ஒன்றைக் காட்டுகின்றது. எந்தவோர் அரசியல் நடவடிக்கைக்கும் நிதித் திட்டமிடல் வேண்டும். நிதியை எப்படிச் சேகரிப்பது? எவ்வளவு காலத்துக்குள் சேகரிப்பது? போன்றவை தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இருக்க வேண்டும்.போதிய நிதி இருந்தால்தான் கட்சி நடத்தலாம்;அரசியல் செய்யலாம்.முழு நேரச் செயற்பாட்டாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.அரை நேரச் செயல்பாட்டாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதுவும் இன அழிப்புக்கு எதிரான அரசியலைச் செய்ய முடியாது.பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது.காற்றைக் குடித்துக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

தமிழ்க் கட்சிகளிடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழ் கோப்பரேட்கள் சிலர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் உதவியதாகக் கூறப்படுகிறது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பெருங்கூட்டங்களை நடத்தக்கூடிய அளவு நிதி பெயரவில்லை என்று தெரிகிறது.ஒப்பீட்டு ரீதியாக தமிழ்க் கட்சிகளின் நிதி ரீதியான பலவீனங்களை பிரச்சாரக் களம் உணர்த்துகின்றது.

அதே சமயம் ஆளுங்கட்சியான என்பிபி அரச பலத்தோடும் வளத்தோடும் அதிகளவு நிதியைக் கொட்டி ஒரு பிரச்சாரப் போரை நடாத்துகின்றது.அரச பிரதானிகள் அந்தப் பிரச்சார மேடைகளில் தோன்றுகிறார்கள். குறிப்பாக அனுர கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரோடு கைகளைக் குலுக்கி கொள்வதற்காக தமிழ் ஆண்களும் பெண்களும் முண்டியடிக்கிறார்கள். சில சமயங்களில் குழந்தைகளும் அனுரவோடு செல்ஃபி எடுப்பதற்கு அழுகிறார்கள்.

இது கைபேசிகளின் காலம். மனிதர்களிடம் இயல்பாக உள்ள தன்மோகமானது செல்ஃபி யுகத்தில் ஒரு நோயாக மாறி வருகிறது. அறிவிற்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளியானது யூரியுப்பர்களின் காலத்தில் மேலும் ஆழமானதாகி வருகிறது. பிரபல்யமானவரோடு படம் எடுப்பது; கைகுலுக்குவது;செல்ஃபி எடுப்பது; பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டுக் கொள்வது.

என்பிபி எந்தளவுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷனில் கவனமாக இருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்த மே தின கூட்டத்தில்,அனுர பேசும் போது,”லங்கா தீப” ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷண எடுத்த ஒளிப்படம் தொடர்பான சர்ச்சை ஒரு சான்று.அந்த ஒளிப்படம் அனுரவை மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு தலைவராக முன் நிறுத்தவில்லை.மாறாக எதையோ கண்டு மிரண்டு,நம்பிக்கையிழந்து,,கையறு நிலையில் தன்னை காப்பாறுமாறு பிராத்தித்திக்கின்ற ஒருவராகத்தான் அந்த படம் அவரை முன்னிறுத்துகிறது.அந்தப் படத்தை வெளியில் வரவிடாமல் என்பிபிக்காரர்கள் தடுத்திருக்கிறார்கள். அதாவது அனுரவின் எந்தப் படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் என்பிபி கவனமாக இருக்கிறது.

தமிழ்ப் பகுதிகளிலும் அப்படித்தான்.வல்வெட்டித் துறையில் அனுரவை அணைக்கும் மூதாட்டி; கிட்டு பூங்காவில், வவுனியாவில் அனுரவை நோக்கிக் கைகுலுக்க அந்தரப்படும் ஆண்கள்,பெண்கள் போன்ற படங்களும், காணொளிகளும்; அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பும் நோக்க முடியவை.

அனுர எளிதாக அணுகப்படக்கூடிய, தொட்டுப் பழகக்கூடிய, எளிமையான ஒருவராகக் காணப்படுகிறார்.எனவே அவரோடு கை குலுக்கிப் படம் எடுப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் ஆர்வமாகக் காணப்படுகிறார்கள்.

பாவம் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களோடு கைகுலுக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ ஆட்கள் இல்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதை டிஜிட்டல் ரோமோஷன் செய்வதற்கு அவர்களிடம் காசு இல்லை.

எனினும் ஒரு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே கூட்டில் நிற்கின்றன. என்பிபியை, அல்லது ஜேவிபியை அம்பலப்படுத்துவது, எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான்கு தமிழ்த்தேசியத் தரப்புகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன. எனைய பெரும்பாலான விடயங்களில் தங்களுக்கு இடையே முட்டி மோதுகின்றன.அங்கே போட்டித் தவிர்ப்பிற்கான புரிந்துணர்வு இல்லை.

“நாங்கள்தான் பெரிய கட்சி, மற்றவை உதிரிக் கட்சிகள்” என்று கூறும் சுமந்திரன் “நாங்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்”என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் உள்ளூரில் ஏனைய கட்சிகளுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடக்கின்றது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றி மறைமுகமாக சுமந்திரனையும் பலப்படுத்தி விடுவோமா என்ற பயம் பல வேட்பாளர்களிடம் உண்டு.அண்மையில் ஒரு பெண் வேட்பாளர் அவ்வாறு கேட்டதாக சிறீதரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுமந்திரனின் “எக்கிய ராஜ்ய”வை வைத்து அவரைத் தாக்குகிறது. தங்களுடையது மட்டும்தான் கொள்கைக் கூட்டு என்று கூறுகின்றது.

யாழ். மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் மணிவண்ணன் போட்டிக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்.ஒரு பிரதான போட்டியாளர் அவ்வாறு அகற்றப்பட்டிருப்பது ஏனைய கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அங்கே அரசாங்கத்தின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்,நீக்கலான மேல்வாய்ப் பல்லோடு, குழந்தைத்தனமான முகத்தோடு காணப்படுகிறார்.நகரத் திட்டமிடல் தொடர்பில் தனக்குள்ள பாண்டித்தியத்தை நிரூபிக்கும் அறிக்கைகளை விடுகிறார். மணிவண்ணன் இல்லாத போட்டிக் களம் தனக்குச் சாதகமானது என்று நம்பி என்பிபி உழைகின்றது.அர்ஜுனாவுக்கும் மூன்று என்பிபிக்காரர்களுக்கும் வாக்களித்த மக்கள் இனி யாருக்கெல்லாம் வாக்களிக்கப் போகிறார்களோ?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபிக்கும் அர்ஜுனாவுக்கும் கிடைத்த எதிர்பாராத வெற்றி என்பது தமிழ் ஐக்கியமின்மையினதும் தமிழ்த் தேசிய இயலாமைகளினதும் விளைவு. அந்த ஐக்கியமின்மை இப்பொழுதும் உண்டு.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு புதிய ஐக்கிய முயற்சி.ஆனால் அது தமிழரசுக் கட்சியைப் பிரதியீடு செய்யும் வளர்ச்சியை இன்னும் பெறவில்லை.

இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் தாயக அளவில், ஒப்பீட்டளவில் அதிக வெற்றி வாய்ப்புக்கள் தெரிகின்றன.முன்னணி முன்னரை விட முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட பலமுனைப் போட்டிக்குள் நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகளில் யார் வென்றாலும் அது தேசிய மக்கள் சக்திக்குத் தோல்விதான். அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியத் தரப்பு தோற்றாலும் அந்த வாக்குகள் ஏனைய மூன்று தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கு போகுமாக இருந்தால் அதுவும் பாதுகாப்பானதே. அப்பொழுது மீன் கரைந்தாலும் சட்டிக்குள் இருக்கும்.மாறாக தமிழ்த் தேசியப் தரப்பிலிருந்து என்பிபிக்குத் திரும்பும் வாக்கு ஒவ்வொன்றும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் வாக்குத்தான்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More