Home இலங்கை “சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் காலம்” ? நிலாந்தன்.

“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் காலம்” ? நிலாந்தன்.

by admin

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளி நொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி.

இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,“தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை.தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். எனினும், இது ”நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம்;காலம்” என்றும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற கட்சிகளை நோக்கிய மறைமுக அழைப்பு ஒன்று அதில் உண்டு. எனினும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டிய பின் அந்தப் பலத்தின் அடிப்படையில்தான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.

ஆனால் மூத்த அரசியல் செயற்பாட்டாளர் ஆகிய பஷீர் காக்கா அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை வைத்து அதில் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தேர்தல் முடிவுகளின் பின் கருத்துத் தெரிவித்த கஜேந்திரக்குமார்,
தமிழரசுக் கட்சி ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வைக் கைவிடுமாக இருந்தால் தாங்கள் அக்கட்சியோடு இணைந்து செயற்படத் தயார் என்று கூறியுள்ளார். அந்த நிபந்தனையைத் தமிழரசுக் கட்சி ஏற்காவிட்டால் உள்ளூராட்சி சபைகளை தமிழரசுக் கட்சியோடு இணைந்து நிர்வாகிப்பதற்கு முன்னணி தயாராக இல்லை என்ற பொருள் அதில் உண்டு.

மேற்கண்டவைகள் யாவும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான தோற்றப்பாடுகளின் தொகுக்கப்பட்ட காட்சி. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் தெளிவான சித்திரம் என்ன? தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்ததைப் போலவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஒரு தேசமாக வாக்களித்திருக்கிறார்கள்.ஆனால் கட்சிகள்தான் ஆளுக்காள் பிரிந்து நிற்கின்றன.இனிமேலும் பிரிந்து நிற்கப் போகின்றன?

தமிழரசுக் கட்சியின் வெற்றி என்பது ஒரு வகையில் சுமந்திரனின் வெற்றியும் சிறீதரனின் வெற்றியும்தான். அதாவது அது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் பிளவைக் கூர்மையாக வெளிப்படுத்தும் ஒரு வெற்றி.அப்படியென்றால் நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் இப்போதைக்கு கிடையாதா? தன் கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாட்டை,ஐக்கியத்தைப் பேண முடியாத தலைமைகள் கட்சிக்கு வெளியே தேசிய ஐக்கியத்தை எப்படிப் பேண முடியும்?

தேர்தல் வெற்றிக்குப் பின் சுமந்திரனின் ஆதரவாளர்களும் முன்னணியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் தேசம் தொடர்ந்தும் கட்சிகளாகப் பிரிந்து நிற்கப் போகிறது என்றே தெரிகிறது. சுமந்திரனின் விசுவாசிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபையின் பிரதான வேட்பாளரும் உட்பட பல பிரதானிகள் தங்கள் சொந்த வட்டாரங்களில் தோற்கடிக்கப்பட்டிருப்பதை ஏளனத்தோடு சுட்டிக்காட்டி வருகிறார்கள்.ஆனால் சுமந்திரனுடைய தாய்க் கிராமத்திலேயே,குடத்தனையில் தமிழரசுக கட்சி ஒரு முன்னாள் இயக்கத்தவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற விடயத்தை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

கட்சிகளுக்கு இடையிலான, கட்சிகளுக்கு உள்ளேயான இந்த ஆழமான பிளவுகளை தனக்குச் சாதகமான ஒரு தோற்றப்பாடாக என்பிபி கருதுகின்றது.அதனால்தான் கூறுகிறது, வடமகாணத்தில் தனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன என்று. யாழ்ப்பாணத்தில் அதுதான் இரண்டாவதாக நிற்கிறது.வவுனியாவில்,மன்னாரில் முதலாவதாக நிற்கிறது.மட்டக்களப்பில் இரண்டாவதாக நிக்கிறது.வன்னியில் இரண்டாவதாக நிற்கிறது.

தமிழரசுக் கட்சிக்கு 75 வயது.கொங்கிரஸ் கட்சிக்கு அதைவிட அதிக வயது.இந்த இரண்டு கட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றோடு என்பிபியை ஒப்பிட்டுப் பார்த்தால்,6 மாதங்களில் ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு கட்சிக்கு,தென்னிலங்கை மைய கட்சிக்கு,எவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்கின்றன?

அதே சமயம் எல்லாத் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் என்பிபி பின் தள்ளப்பட்டு விடும்.அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே சித்திரம்தான் மீண்டும் கிடைத்திருக்கின்றது.

இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளுக்கு உணர்த்துபவை.இந்தச் சித்திரமே தொடர்ந்தும் காணப்படுமாக இருந்தால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கஜேந்திரகுமார் இறந்த காலத்தில் இருந்து நிறையப் படித்திருப்பதும் அந்த அடிப்படையில் நெகிழ்வாக நடந்து கொள்வதும் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப உதவும். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு அவர் உரையாடியதாகவும் அவர்களிடமிருந்து இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள சில கட்சிகள் ஏற்கனவே பழைய கூட்டமைப்பை மீண்டும் புதுப்பிக்கும் விருப்பத்தோடு காணப்படுகின்றன.கிளிநொச்சியில் சந்திரக்குமாரை அவர்கள் உள்வாங்கியதன்மூலம் அவர்கள் தெளிவாக சுமந்திரனை நோக்கிச் சாய்ந்தார்கள்.எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயல்படும் உள்நோக்கம் இருந்தால் அக்கட்சி முன்னணியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே உள்ளூராட்சி சபைகளில் என்பிபிக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஒரு தேசமாகத் திரளும் வாய்ப்புக்கள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பிரகாசமாக இல்லை.அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் நிச்சயமற்ற தலைமைத்துவம்தான் இருக்கும்.

முன்னணிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான பிளவு கொள்கை அடிப்படையிலானது என்று முன்னணி கூறுகிறது.ஆனால் ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வு சுமந்திரனின் விருப்பமா அல்லது முழுக் கட்சியினுடையதும் நிலைப்பாடா என்ற கேள்விக்கு விடை வேண்டும்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழரசுக் கட்சியின் மீதான சுமந்திரனின் பிடி முன்னரை விடப் பலமானதாகவும் இறுக்கமானதாகவும் மாறியிருப்பதனால், அவர் தனது நிலைப்பாட்டைக் கட்சியின் நிலைப்பாட்டாக மாற்றுவார் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால்,எக்கிய ராஜ்ய என்பது தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல.கட்சியின் பதில் தலைவர் சிவஞானமும் உட்பட கிளிநொச்சியில் பெரு வெற்றி பெற்ற சிறீதரன், வன்னியில் ரவிகரன், கிழக்கில் சாணக்கியனைத் தவிர பெரும்பாலான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாருமே வெளிப்படைத் தன்மை மிக்க சமஸ்டிக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். ஒற்றையாட்சிப் பண்புமிக்க தீர்வுப் பொதி ஒன்றுக்கா தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள்? இல்லை.எனவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை சுமந்திரனின் கட்சியாகப் பார்க்க முடியாது.இது தொடர்பாக அதாவது எக்கிய ராஜ்ய தொடர்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒரு பகிரங்க மேடையில் அமர்ந்து வெளிப்படைத் தன்மை மிக்க ஓர் உரையாடலைச் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரப்புரைகளின் போது கஜேந்திரகுமார் ஒரு விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று. தமிழ் மக்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை தேர்தலில் வெளிப்படுத்தி விட்டார்கள்.அந்த முடிவின் அடிப்படையில், பொது எதிரிக்கு எதிராக எப்படித் தேசமாகத் திரளலாம் என்றுதான் சிந்திக்கலாமே தவிர மீண்டும் கட்சிகளாகச் சுருங்கவோ சிதறவோ முடியாது.அதிலும் குறிப்பாக இறந்தவர்களை நினைவு கூரும் ஒரு மாதத்தில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அது.அதற்குத் தமிழ்க் கட்சிகள் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் மாகாண சபை தேர்தலின் போதும் மீண்டும் இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று கூற வேண்டியிருக்கும்.ஏனென்றால் என்பிபி தமிழர் தாயகத்தில் பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More