Home இலங்கைஅனுர அரசாங்கம் இரட்டை வேடம்

அனுர அரசாங்கம் இரட்டை வேடம்

by admin

 

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கரையோர பகுதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட  கனிய மணல் அகழ்வுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் உள்ளூர் முகவர்கள் சிலரின் உதவியுடன்  மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு மக்களின் விருப்பம் இன்றி அனுமதி வழங்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தேர்தல் முடிந்து உள்ளூராட்சி மன்றங்கள் கூட  அமைக்கப்படாத நிலையில் கனிய மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்குவதற்கான அளவீட்டு பணிகளை அரச நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக நேற்று முன் தினம் (19)  மத்திய நில அளவை திணைக்களத்தினர் பேசாலை 50 வீட்டு திட்டம் பகுதியில் கனிய மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் வருகை தந்திருந்த நிலையில் பொது அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்களின் தலையீடு காரணமாக அளவிடும் பணிகளை நிறுத்தி விட்டு வெளியேறியிருந்தனர்.
குறித்த நில அளவை திணைக்களத்தினர் அளவீடு மேற்கொள்ளும் பணிகளை ஆவணப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் விதமாக  செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டை  காணொளியாகவும் பதிவு செய்து அச்சுறுத்தி இருந்தனர்.
  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவும் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்து ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பெற்று சில நாட்களில் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க அரச திணைக்களங்கள் வருகை தந்த நிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்து சில நாட்களே நிறைவடைந்த நிலையில் மீண்டும் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள திணைக்களங்கள் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு அனுர தலைமையிலான அரசாங்கம் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் ஒரு வாக்குறுதியையும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாட்டையும் முன்னெடுத்து வருகின்றமை மன்னார் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
அதே நேரம் மன்னாரில் உள்ள சில மக்களால் புறக்கணிக்கப்பட்ட முகவர்களை பயன்படுத்தி உள்ளூர் திணைக்களங்களிடங்களிடமும்  அதே நேரம் சில கிராம மக்களிடம் அனுமதி பெறுவதற்கும்  கனிய மணல் அகழ்வோடு தொடர்புடைய நிறுவனம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More