Home இலங்கைகிருஷாந்தி கொலை – மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளின் மனு தள்ளுபடி

கிருஷாந்தி கொலை – மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளின் மனு தள்ளுபடி

by admin

 

1996 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (03) தள்ளுபடி செய்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஐந்து பிரதிவாதிகளும் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை  நிறைவேற்றாததால் தமக்கு மன்னிப்பு வழங்கி அந்த தண்டனையை 20 ஆண்டுகளாகக் குறைக்க  பரிசீலிக்குமாறு கோாி   தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவையே  உயர் நீதிமன்றம் ஒருமனதாக தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு இன்று குமுதுனி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டு    பரிசீலிக்கப்பட்டபோது,  பதிலளிப்பவர்களாக பெயரிடப்பட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினர்.

அந்த முதற்கட்ட ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மனுவை பராமரிக்க முடியாது என வாதிட்ட சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர்  ஜெனரல் உரிய சட்ட காலம் முடிந்த பிறகு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் சமர்ப்பணங்களை முன்வைத்த சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அரசியலமைப்பின் படி, நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் முழுமையான உரிமை என்றும், அத்தகைய மன்னிப்பைக் கோர மனுதாரர்களுக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய ஒருமனதாக முடிவு செய்தது.

1998 ஆம் ஆண்டு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட தமக்கு, அந்த நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட  போதிலும் அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவு காரணமாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும்  இதன் காரணமாக தாம் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்   மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனா்.

இதனால் , தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றி, 1998 முதல் அதை அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும்  , தண்டனை அமுல்படுத்தப்படாவிட்டால், ஜனாதிபதி தங்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள்  கோரியிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More