Home இலங்கையாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பம்

by admin
யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் ‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025’ எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 3 தினங்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தக திருவிழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போதே ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்று வருகின்றன.
நாம் நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்வது போல வாசிப்பு என்பது நம் மனதுக்கும் புத்திக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இந்த உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவையும் சமூகப் பொறுப்பும் நமக்கு உள்ளது.
அந்த வகையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை விலைக்கழிவுகளுடன் அவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு.
இதனை கருத்தில் கொண்டு வருடம் தோறும் புத்தகத் திருவிழா ஒன்றை நடாத்த வேண்டும் எனும் முயற்சியின் முதல் படியாக கடந்த வருடம் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இனை சிறப்பாக நடாத்தி இருந்தோம் அனைத்து தரப்பினரதும் பெரும் வரவேற்பை பெற்று சிறப்பான புத்தக திருவிழாவாக அது அமைந்தமையானது இவ்வருடம் மேலும் சிறப்பாக இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவினை ஒழுங்கமைக்க எம்மை ஆர்வப்படுத்தியது. குறிப்பாக இப் புத்தக திருவிழாவானது இலாபநோக்கமற்ற முறையில் நடாத்தப்பட உள்ளது.
உள்நாட்டிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன
பொதுமக்கள், வாசகர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள்  ,ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் ஆகிய நீங்கள் ஒவ்வொருவரும் ‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025 இற்கு வருகை தருவதன் மூலம் பலதரப்பட்ட பன்மொழி பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கும் கொள்வனவுகளை மேற்கொள்வதற்கும் மட்டுமன்றி பிரபல எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடவும் புத்தக வெளியீடுகளில் பங்குபெறல் மற்றும் நாடக அரங்குகளை கண்டுமகிழ்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தக திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும் கலந்துகொள்கிறார்.
மூன்று தினங்களும் புத்தக கண்காட்சியை தாண்டி பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – என்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More