மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை போராட்ட களத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தார்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு,போராட்ட களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்தார் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்,,,
ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105 ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை(15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம்.எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டதோ அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்ன என்றால் மன்னார் மண்ணிலே கனிய மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும்.மேலும் மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல் மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க வேண்டும்.





