யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள காலநிலை எச்சரிக்கை, தற்போது அறுவடைக்காலத்தில் உள்ள வடபகுதி விவசாயிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மாற்றங்கள் காரணமாக அடுத்த சில வாரங்களில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அவர் கணித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பேராசிரியர் பிரதீபராஜாவின் கணிப்பின்படி
எதிர்வரும் 14ஆம் திகதி வரை இலங்கைக்குத் தென்கிழக்கே உருவாகியுள்ள வளிமண்டலத் தளர்வு நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீளவும் எதிர்வரும் 16ம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் 16 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இலங்கைக்கு அதிக மழையைத் தரும் மேடன் ஜுலியன் அலைவு (MJO) வங்காள விரிகுடாவிற்குள் நுழையவுள்ளதால், பெப்ரவரி இறுதி மற்றும் மார்ச் ஆரம்பத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போது நெல் அறுவடை மற்றும் சிறுபோகத் தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதால், விவசாயிகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மழை தீவிரமடைவதற்கு முன்னரே (பெப்ரவரி 14-க்கு முன்) முதிர்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்துவிடுவது சிறந்தது. அத்துடன் அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் ஏனைய தானியங்களை மழைநீர் படாதவாறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் மற்றும் அறுவடைக்குப் பின்னான செயற்பாடுகளை (உலர வைத்தல் போன்றவை) மழையற்ற இடைவெளிக் காலங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளுதல் சிறந்தது என அவா் தெரிவித்தார்.
Tag Words: #JaffnaWeather #SriLankaRain #AgricultureAlert #ProfPratheeparajah #FarmerSupport #Harvest2026 #LKA #ClimateUpdate

