Home இலங்கை😭 அல்லைப்பிட்டி  சிறுவனின் உடல் நல்லடக்கம்  – மக்கள்   போராட்டம்

😭 அல்லைப்பிட்டி  சிறுவனின் உடல் நல்லடக்கம்  – மக்கள்   போராட்டம்

by admin

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த மக்கள் போராட்டம் இன்று (பெப்ரவரி 12, 2026) நடைபெற்றது. வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள சிறுவனின் இல்லத்தில் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர், இறுதிக்கிரியைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, பெரும் சோகத்திலும் ஆத்திரத்திலும் இருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடலத்துடன் வீதிக்கு வந்த உறவினர்களும் பொதுமக்களும் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு வீதியில் திரண்டனர். அவர்கள் ” காவல்துறையினரை கைது செய்!”, “எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்!”, “காவல்துறையினரின் அராஜகம் தொடர்கிறது!” போன்ற கோஷங்களை எழுப்பி தமது கண்டனத்தையும் நீதியையும் கோரினர். பின்னர், சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

🚨 பின்னணி:
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அல்லைப்பிட்டிப் பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தச் சிறுவன் படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் வடக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், காவல்துறையினரின் செயற்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

காவல்துறையினரின் செயல் தற்காப்புக்கானது அல்ல எனவும், அராஜகமானது எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள பாரிய கொந்தளிப்பை அடுத்து, பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகத்தர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமையகம் இந்தச் சம்பவம் குறித்து விசேட குழு ஒன்றின் மூலம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

அத்துடன் தானாக முன்வந்த விசாரணை: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு (HRCSL) இந்தச் சம்பவம் தொடர்பில் ‘தானாக முன்வந்து’ (Suo Motu) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சம்பவத்தின் போது உண்மையில் என்ன நடந்தது? துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டிய அளவு பாரதூரமான நிலைமை அங்கு காணப்பட்டதா? என்பது குறித்து 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையினரே காவல்துறையினரை விசாரிக்கும் முறையன்றி, ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும், வடபகுதியிலுள்ள காவல்துறையினர் பொதுமக்களுடன் பழகும் விதம் மற்றும் அவசர காலங்களில் துப்பாக்கியைப் பயன்படுத்தும் நடைமுறை (Rules of Engagement) குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்

 

Tag Words: #AllaipittyKilling #JaffnaProtest #PoliceBrutalitySL #JusticeForChild #UduvilPolice #HumanRightsSriLanka #LKA #BreakingNewsJaffna

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More