253
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், ஈரான் மீது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய தொடர் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் (U.S. Military) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ஒருமுறை நடத்தப்படும் தாக்குதலாக இல்லாமல், பல வாரங்கள் நீடிக்கும் ஒரு தொடர் ராணுவ நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிகிறது. வெறும் அணுசக்தி நிலையங்களை மட்டும் குறிவைக்காமல், ஈரானின் அரசு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் (State and Security infrastructure) தகர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு பகுதிக்கு ஏற்கனவே இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford அனுப்பப்பட்டுள்ளது. இதனுடன் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் அதிநவீன போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.
ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது கடினமாக உள்ளது; சில நேரங்களில் பயம் மட்டுமே தீர்வைத் தரும்” என்று அதிபர் டிரம்ப் சமீபத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. அதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. இந்த ராணுவ நகர்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
________________________________________
Spread the love

