Home இலங்கைதென்மராட்சியில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள் – 6 வாகனங்கள் தீக்கிரை – ஒருவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

தென்மராட்சியில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள் – 6 வாகனங்கள் தீக்கிரை – ஒருவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.  குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு,  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சாவகச்சேரி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  அங்கிருந்து தப்பி சென்ற கும்பல் கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.  அதில் ஒரு வீடு தீ பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவையும் தீக்கிரையாகியுள்ளது.
அதனை தொடர்ந்து மீசாலை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த குறித்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.  அங்கிருந்து மற்றுமொரு வீடொன்றில் புகுந்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட சில மணி நேரத்தினுள் தமது ஊருக்குள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு தீ வைத்ததை அறிந்து ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை பலர் தப்பி சென்ற நிலையில் நால்வர் மடக்கி பிடிக்கப்பட்டனர் . வன்முறை கும்பல் தப்பி செல்லும் போது விட்டு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பவற்றையும் மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினரிடம் தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நால்வரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் வாள்கள் , கொட்டான்கள் என்பவற்றையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
#JaffnaViolence #SwordAttackJaffna #ArsonAttack #Chavakachcheri #Kodikamam #PetrolBombAttack
#Vandalism
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More