நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்
காற்றில் சிக்குண்ட கிழிசலை
இடையில் கட்டிக்கொண்டாள்
குனிந்தபடியே கிடந்து விடாய் தணித்தாள்
ஆடுமேய்க வந்தவர்கள்
இவள் செந்நிறக்கண்கள்கண்டு அச்சம்மேலிட ஓடினர்
காற்றின் வேகம் கிழிசலைக் கிழித்தெறிந்தது
அவள் நிர்வாணத்தின் அச்சம்
ஊரை அடக்கியது
சிவந்த கண்களில் தெறித்த வெளிச்சம்
பார்ப்பவரை அச்சப்படுத்தியது
திரண்டு கிடந்த கூந்தல்
அடர் கருமேகமாய் அசைந்தது
நிமிர்ந்த நடையும்
ஊரைவெறித்த கண்களுமாய்
ஊர் அளந்தாள்
கொடியில் கிடந்த சேலையை எடுத்துப்போர்த்தினாள் ஒருத்தி
சிறுகல்குத்திப் புண்ணாக்கிய காலுக்கு மருந்திட்டாள் மற்றொருத்தி
பழஞ்சோற்றில் நீருட்டு கருவாட்டோடு கொடுத்தாள் இன்னொருத்தி
மெலிந்த கண்ணகளின் சிவப்பு வற்ற
காலை நீட்டி அப்படியே படுத்தாள்
அவள் மௌனம் கலைத்து
ஒரு துளி சட்டென விழுந்தது
பின் அடுத்து, அடுத்தடுத்து
பட்டென ஒருமின்னலில் வான் பிளந்து
கொட்டத்தொடங்கியது மழை
கொடியில் கிடக்கும் உடுப்பெடுக்க
வெயிலில்க்காய்ந்த மீன் பொறுக்க
ஊர் ஓடியது
செம்மண் கலந்த நீர்
அவள் வெற்றுடம்பு தொட்டோடிற்று
தெறித்த மின்னல் நெற்றியில் வீழ்ந்து மடிந்தது
வானக்கருமை மறைய கண்விழித்து எழுந்தாள்
வானம் நீலம் படரச் சிரித்தது.
கலாவதி கலைமகள்,
நாவற்குடா, மட்டக்களப்பு.

