454
ஈழத்துத் தமிழர்தம் வரலாற்றில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செழுமையான தமிழ்ப் ‘பண்டிதர்’ மரபு தழைத்தோங்கி வந்துள்ளமை பற்றி அறியக் கிடைக்கிறது. இப்பண்டித மரபிற்கான வலுப்படுத்துகையினை பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரும் அவர் சார்ந்த ஆரிய திராவிட பாசாபிவிருத்திச் சங்கமும் செய்து வந்துள்ள விதத்தையும் கண்டறிய முடிகின்றது.
பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பின் கவனிப்பிற்குரிய பண்டிதர்களுள் ஒருவராக செ.பூபாலப்பிள்ளை அவர்கள் விளங்குகின்றார். 1902 இல் ஆரையம்பதியில் பிறந்து கல்லடியில் வாழ்ந்த இவர் தமிழ்ப் பண்டிதராக, ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, ஆசிரியர் கலாசாலைப் போதனாசிரியராகப் (விரிவுரையாளராக) பல தளங்களில் சேவையாற்றித் தனக்குப் பின்னர் மட்டக்களப்புத் தேசம் எங்கும் நல்லாசிரியர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் சேவையாற்றுவதற்கான காத்திரமான உருவாக்கங்களைச் செய்த பேராசானாக வாழ்ந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து மேற்கிளம்பிய ஈழத்துப் பூராடனார், வித்துவான் க.ஞானரெத்தினம், திமிலைத்துமிலன் எனப்பல அறிஞர் பெருமக்களின் உருவாக்கத்திற்கான ஆசிரியத்துவத்தை மேற்கொண்ட ஆளுமையாகப் பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்கள் செயலாற்றியுள்ள வரலாற்றை ஆய்ந்தறிய முடிகின்றது.
ஒரு சைவத் தமிழ்ப் பண்டிதர், ஓர் தமிழ் ஆசிரியர் என்ற வரையறைகளுடன் மாத்திரம் இவர் வாழவில்லை மாறாக தேர்ந்த விவசாயியாக இயங்கியிருக்கின்றார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உலகளவில் போக்குவரத்துத் தடைப்பட்டதால் உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்பட்ட போது உள்நாட்டு விவசாயத்தை விருத்தியாக்கும் செயற்பாட்டில் தானும் ஈடுபட்டுப் பிறரையும் ஊக்கப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பில் வெங்காயத்தை வெற்றிகரமாக விளைவிக்க முடியும் என்பதை 1953 இல் தனது விவசாய நடவடிக்கைகளுடாக நிரூபித்துள்ளார். இதேபோல ஆட்டுப் பண்ணைகளையும் வெற்றிகரமாக பராமரித்திருக்கின்றார். இவரது விவசாய நடவடிக்கைகள் அப்போது தேசிய ரீதியில் முன்னுதாரணமாக இருந்துள்ளன.
பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் துணிகரமான செயற்பாடுகளின் விளைவாகவே அப்போதைய மட்டக்களப்பு அரசாங்க சபைப் பிரதிநிதி நல்லையா மாஸ்டர் அவர்களின் ஆதரவுடன் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உருவாக்கப்பட்டது என்பதை அறியக் கிடைக்கிறது. இக்கலாசாலையின் தேவை குறித்து பொத்துவில் தொடக்கம் திருகோணமலை வரை ஒரு நீண்ட பாத யாத்திரையினை ஒழுங்கமைத்து நடத்தி அதன்விளைவாக ஆசிரியர் கலாசாலையை மட்டுநகருக்குக் கொண்டு வந்த செயற்பாட்டாளராகப் பண்டிதர் அக்காலத்தில் இயங்கியிருக்கின்றார்.
இத்தோடு தற்போது மட்டுநகரின் கல்லடியில் ‘வேலூர்’ என்று அழைக்கப்படும் ஊரை உருவாக்கிய முன்னோடியாகப் பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களே திகழ்ந்துள்ளார். கல்லடி கிராமோதய சபையின் அங்கத்தவராக இருந்த பண்டிதர் காணியற்றிருந்த மக்களுக்கு அரச காணிகளைப் பகிர்ந்து வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தி இந்த வேலூர் கிராமத்தை உருவாக்கியதாகவும் அறியமுடிகின்றது.
கிழக்கிலங்கையின் அரும்பொருள் கண்காட்சியை தலைநகர் கொழும்பிலே நடத்திக் கிழக்கின் பண்பாடுகளை நாடறியச் செய்யவல்ல ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டாளராகவும் இவர் இயங்கியிருக்கின்றார்.
பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களைப் பற்றி ஈழத்துப் பூராடனார் குறிப்பிடும்போது ‘மட்டக்களப்புத் தமிழாசிரியர்களின் தந்தை’ என்று புகழாரஞ் சூட்டியுள்ளார். ‘ஆற்றலுள்ளவர்களைத் தேடிக்கண்டுபிடித்து கைகொடுத்து வளர்த்துவிடுவதில் அவர் வல்லவர்’ என்று ஓய்வுநிலை அதிபர் வே.கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டிதரின் பணியாற்றலை விதந்து கூறியிருக்கிறார்.
இவ்வாறு, மட்டக்களப்பின் வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ்க் கல்வி அபிவிருத்தி, விவசாய விருத்தி, குடியேற்றங்களை உருவாக்குதல், சைவசமயத்தை வளர்த்தல் என்று பல்துறைகள் சார்ந்தும் காத்திரமான பணிகளையாற்றித் தனக்குப் பின்னரும் அப்பணிகளை முன்னெடுத்துச் செல்லவல்ல ஆக்கபூர்வமான மாணவர்களையும் உருவாக்கியுள்ள பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறைகளுக்கு அவசியமானது எனலாம்.
பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை ஈழத்துப் பூராடனார் ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். ஆர்வமானோர் இந்நூலை நூலகம் இணையத்தில் தரவிறக்கி வாசிக்கலாம்.
Spread the love

