143
ஈராக்கின் எர்பில் (Erbil) பகுதியில் உள்ள பிரித்தானியாவிற்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஆதரவு குழுக்களால் ஆளில்லா விமாங்கள் (Drones) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தின் போது, சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அதிநவீன அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானம், வெறும் 20,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய ஈரானின் ‘ஷாஹெட்-136’ (Shahed-136) ரக ஆளில்லா விமானத்தை விரட்டிச் சென்றும் அதைச் சுட்டு வீழ்த்தத் தவறியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கடந்த பெப்ரவரி இறுதியில் இருந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கருதப்படுபிறது. எர்பில் பகுதியில் உள்ள காஸ்ட்ரோல் (Castrol) எண்ணெய் நிறுவனத்தின் மீது மூன்று ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளிகளில், அமெரிக்க போர் விமானம் மிகத் தாழ்வாகப் பறக்கும் சிறிய ஆளில்லா விமானத்தை நெருங்க முயற்சிப்பதும், ஆனால் அதன் வேகக் குறைவு மற்றும் திசைமாறும் தன்மை காரணமாக அதைச் சரியாகக் குறிவைக்க முடியாமல் போவதும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்கத் தரப்போ அல்லது அதன் நேச நாடுகளோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை. நவீன காலப் போர்க்களங்களில் அதிக விலை கொண்ட போர் விமானங்களுக்கு இத்தகைய மலிவான ஆளில்லா விமானங்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Spread the love

