Home இலங்கைஏயார்பஸ் ஊழல் : மஹிந்த மற்றும் பிரியங்கர ஜயரத்னவிடம் இன்று விசாரணை!

ஏயார்பஸ் ஊழல் : மஹிந்த மற்றும் பிரியங்கர ஜயரத்னவிடம் இன்று விசாரணை!

by admin

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏயார்பஸ் (Airbus) கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகள் தற்போது அரசியல் களத்தில் பெரும் அதிரடியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இன்று (2026 மே 12, செவ்வாய்க்கிழமை) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் 2015-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தே தற்போதைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளனர்.  2013-இல் 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது பெறப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்ச விவகாரம் குறித்து இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகேவிடம் நேற்று (11) சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, இலஞ்சப் பணம்    சிங்கப்பூரின் ‘பிஸ் சொல்யூஷன்’ (Biz Solution) நிறுவனம் மூலம் ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பணம் இலங்கையிலுள்ள ‘அகோ’ (Ago) எனும் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து காசோலைகள் மூலம் ‘சதிசி மீடியா கிரியேஷன்’ (Sadisi Media Creation) நிறுவனத்தின் பங்குதாரரான சமன் சம்பத் என்பவருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன  (அண்மையில் உயிரிழந்தார்),  முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர்  ஷமீந்திர ராஜபக்ஷ (தேர்தல் காரியாலய மேற்பார்வையாளர்) ,  கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோா் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் விவகாரமானது சர்வதேச மட்டத்தில் எயார்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்ட ஒரு ஊழல் குற்றச்சாட்டாகும். இலங்கையில் இதன் விசாரணை நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிதி எவ்வாறு தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஷமீந்திர ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இயங்கிய தேர்தல் காரியாலயத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் 9 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளமை, இந்த ஊழலின் ஆழத்தைக் காட்டுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய வாக்குமூலம், இந்த நிதிப் பரிமாற்றங்களின் பின்னணியில் இருந்த அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

#AirbusScandal  #MahindaRajapaksa #CorruptionInvestigation  #SriLankanAirlines  #MoneyLaundering

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More