164
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் உள்ள இரு வேறு வீடுகளில் புகுந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பணக் கொள்ளை (வல்வெட்டித்துறை):
வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதியில் சீட்டுப் பிடிக்கும் தொழில் செய்யும் நபர் ஒருவரின் வீட்டிலேயே இந்த முதலாம் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமையன்று சீட்டுப் பணத்தைக் கொடுப்பதற்காக, தனது வீட்டில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தை அவர் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள், சமையலறை வழியாக வீட்டிற்குள் புகுந்து அப்பணத்தை முற்றாகக் களவாடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகைக்களவு (உடுப்பிட்டி):
மற்றொரு சம்பவத்தில், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த திருடர்கள் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதிகாலையில் எழுந்த வீட்டு உரிமையாளர், முன்பக்கக் கதவு திறக்கப்பட்டிருப்பதை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நகைப் பெட்டியைச் சோதித்த போது, அங்கிருந்த நகைகள் யாவும் களவாடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், காவற்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொது மக்கள் தங்களது பெருந்தொகையான பணம் மற்றும் நகைகளைப் பாதுகாப்பான முறையில் வைக்குமாறு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Spread the love

