யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் மல்லாகம் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத் திருநாளை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் வழிபாடுகள் நடைபெற்ற வேளையில், அதற்குச் சற்றுத் தொலைவில் காணி உரிமையாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விகாரைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இரு இளைஞர்கள், அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதனை அவதானித்த காவற்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவ்வேளையில், இளைஞர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, அவர்கள் பலாலி காவற்துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இருவரும் மல்லாகம் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன், அவர்கள் இருவரும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
#Jaffna #ThaiyittiVihara #NorthernSri Lanka #MallakamCourt #PoliceArrest #BailConditions #SriLankaNews

