53
வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும், ஒன்றிணைத்து முதற்கட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமராட்சிப் பிரதேசத்திற்கு பொதுவான தீயணைப்பு அலகு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். அதனை வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையானது, இப்பிரதேசத்திற்கான தீயணைப்புப் பிரிவை நிறுவுவதற்கான வசதிகளையும், பிரதேசத்தின் அனைத்து பகுதிகளையும் குறுகிய காலத்தில் அணுகுவதற்கேற்ற வகையில், வடமராட்சியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
எனவே, குறித்த சபையில் தீயணைப்புப் பிரிவை உருவாக்குவதும், அதற்கான ஒத்துழைப்பை வடமராட்சியில் உள்ள ஏனைய சபைகள் வழங்குவது பொருத்தமானதென தெரிவி க்கப்பட்டது.
அத்துடன், வடமராட்சிப் பிரதேசத்திற்கான ஒன்றிணைந்த திண்ம மற்றும் திரவ கழிவு முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும்.
திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் தற்போது வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உக்கக்கூடிய கழிவுகளை பசளையாக்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றபோதும், அதன் முழுக் கொள்ளளவில் இயங்கப்போதுமான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சவால்களை எதிர்கொண்டுவருகிறது.
இந்நிலையில், எல்லா உள்ளூராட்சிச் சபைகளும் ஒரேவிதமான கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபையும் ஒவ்வொரு செயற்பாட்டை (கழிவு சேகரிப்பு / மீள்சுழற்சி) முன்னெடுப்பதன் மூலம் (உதாரணமாக: உக்கக்கூடியவை / பொலித்தீன் / பிளாஸ்ரிக் / உலோகங்கள் / கண்ணாடி / எரியூட்டித் தொகுதியை நிறுவி செயற்படுத்தல் / மற்றும் திரவக்கழிவுகள்) வினைத்திறனாக கழிவுகளை முகாமைத்துவம் செய்ய முடியும்
அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் செயற்பாடாக அமையும் எனவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
Spread the love

