54
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின் படி, நெடுந்தீவில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இரு இளைஞர்கள் கடற்தொழிலுக்காக சிறிய படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, அவர்களில் ஒருவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, உடன் இருந்த மற்றைய தொழிலாளி அருகிலிருந்த ஏனைய கடற்தொழிலாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து பலர் தமது படகுகள் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், காணாமல் போன தொழிலாளியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் சக கடற்தொழிலாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் இணைந்து காணாமல் போன தொழிலாளியை தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது அறிவிக்கப்படும்.
Spread the love

