இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவகாரமாக, ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேசக் குற்றவாளியான நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக் கட்டா’ (Harak Kata) என்பவருக்குச் சாதகமாகச் செயற்பட 120 மில்லியன் ரூபா (1,200 லட்சம் ரூபா) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சரின் புதல்வர் உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனா். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் (CIABOC) இன்று (2026 ஜூன் 25, வியாழக்கிழமை) இக் கைது நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் ரீலங்கா விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) தற்போதைய பணிப்பாளர் அருண வர்ஷ விதான ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ள 3 முக்கிய சந்தேகநபர்களாவா்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) உயர் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘ஹரக் கட்டா’ என்பவரைப் பாதுகாப்புக் கூண்டிலிருந்து விடுவிப்பதற்காக இக்கூட்டுச் சதி அரங்கேற்றப்பட்டுள்ளமை தொடா்பிலேயே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஹரக் கட்டாவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கடுமையான விதிகளிலிருந்து விடுவித்து, சாதாரண ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குப் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வழங்கி, அவனை ஒரு சாதாரண கைதியாகத் தடுத்து வைப்பதற்கான சூழலை உருவாக்க இந்த 1,200 லட்சம் ரூபா (120 மில்லியன் ரூபா) கைமாறியுள்ளது.
இக்குற்றவாளியை வெளிநாட்டுக்குத் தப்ப வைப்பதற்கான விமான நிலைய இராஜதந்திரப் போக்குவரத்து உதவிகளை வழங்குவதற்காகவே விமான நிலையப் பணிப்பாளர் அருண வர்ஷ விதான இதில் இணைக்கப்பட்டு இலஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சிறப்புப் பிரிவினர் தற்போது தீவிர வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
#HarakKataScam2026 #RakithaRajapaksheArrest #BriberyCommissionSL #CharithAbeyasinghe #AirportDirectorArrested

