தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதற்காக, அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து சச்சிந்த தெரிவித்தார்.
அந்த இரண்டு வார காலத்திற்குள் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே ரவிந்து சச்சிந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்தக் கலந்துரையாடலில், மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவாக எங்கள் நிலைப்பாட்டை விளக்கினோம். எங்களுக்கு முன்பு கூறப்பட்டது போல, அரச வைத்தியசாலைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதை அரசாங்கம் எதிர்த்தது. அது எங்களுக்கு முக்கியமில்லை. நான் நாட்டுக்கு அதைச் சொல்ல விரும்புகிறேன். அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய நாங்கள் அரசாங்கத்திற்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளோம். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளை நிறுவுவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டிற்குச் சொல்லுங்கள்” என ரவிந்து சச்சிந்த மேலும் தெரிவித்தார்.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ பீட மாணவர்கள் நேற்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

