175
யாழ்ப்பாணம், வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (மே 01, 2026) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலி. வடக்கு காணி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், இராணுவத்தினரின் ‘கொமாண்டோ’ பங்களாவிற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
வலி. வடக்கின் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 36 வருடங்களாக அப்பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால் பல குடும்பங்கள் இன்றும் உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் அகதி முகாம்களிலுமே வாழ்ந்து வருகின்றனர். தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித சாதகமான தீர்வுகளும் எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தீர்மானித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய போராட்டமும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
தமது வாழ்வாதாரத்தையும், பாரம்பரிய வாழ்விடங்களையும் மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ள மக்கள், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தமது காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Spread the love

