தாய்லாந்தில் இருந்து இலங்கைக்க்கு ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹாஷ்’ (Hash) ஆகிய போதைப்பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (2026 மே 12, செவ்வாய்க்கிழமை) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முறியடிக்கப்பட்ட இலங்கையின் பாரிய போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் திகதி, தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பிய 22 பிக்குகள் (காவி உடையணிந்தவர்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் (PNB) கைது செய்யப்பட்டனர். இவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்தச் சர்வதேச கடத்தல் வலையமைப்பிற்கு உதவிய குற்றச்சாட்டில், அங்குனகொல அமிதானந்த தேரர் என்ற மற்றொரு பிக்குவும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, விசாரணைகளை முன்னெடுத்து வரும் உப காவல்துறை பரிசோதகர் ராஜபக்ஸ இந்த வலையமைப்புடன் தொடர்புடைய சந்திரகுமார தயாரத்ன என்ற சாதாரண நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இன்று (12) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டிருந்தததாகவும் தொிவித்தாா். மேலும் சர்வதேச ரீதியிலான இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதால், அனைத்துச் சந்தேகநபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதச் சின்னங்களைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பிக்குகளின் உடமைகளுக்குள் மறைத்துக் கொண்டு வரப்பட்டமையானது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எவ்வளவு நுணுக்கமாகத் தமது திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட 23 பிக்குகளும் உண்மையிலேயே துறவிகளா அல்லது அவர்கள் கடத்தலுக்காகத் தயார் செய்யப்பட்ட போலி நபர்களா என்பது குறித்தும் காவற்துறையினர் ஆழமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு, இலங்கையின் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் மத நிறுவனங்களின் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#DrugSmugglingSL #NegomboCourt #KushHashDetection #InternationalDrugTrade #BIA_Security

