Home உலகம்பக்கவாதம் மற்றும் தண்டுவடக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய விடியல்:

பக்கவாதம் மற்றும் தண்டுவடக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய விடியல்:

நியூராலிங்கிற்கு முன்பாகவே உலகின் முதல் வணிகரீதியான மூளைச் சிப்பை அறிமுகம் செய்து சீனா சாதனை!

by admin
 பக்கவாதம் (Paralysis) மற்றும் தண்டுவடப் பாதிப்புகளால் கைகால்களை அசைக்க முடியாத நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், உலகின் முதலாவது வணிகரீதியான மூளைச் சிப் (NEO Brain Chip) சாதனத்திற்குச் சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகப் பொது மருத்துவப் பயன்பாட்டு அனுமதியை வழங்கியுள்ளது. பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காயைச் சேர்ந்த ‘நியூராகிள் மெடிகல் டெக்னாலஜி’ (Neuracle Medical Technology) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ‘நியோ’ (NEO) சாதனத்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘நியூராலிங்க்’ நிறுவனம் இன்னும் தனது மருத்துவச் சோதனைக் கட்டங்களிலேயே இருக்கும் வேளையில், சீனா அதனை முந்திக்கொண்டு இந்த சாதனத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த நியோ சிப், நியூராலிங்க் சாதனத்தை விடக் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய (Minimally Invasive) தொழில்நுட்பத்தைக் கொண்டது. நியூராலிங்க் மூளையின் திசுக்களுக்குள் நேரடியாக ஊடுருவக்கூடியது, ஆனால் இந்த நியோ சிப் மூளையின் வெளிப்புறப் பாதுகாப்பு சவ்வுப் பகுதியின் (Dura mater) மீது மட்டுமே பொருத்தப்படும் நாணயம் அளவிலான ஒரு சாதனமாகும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் கைகளை அசைப்பது போல நினைக்கும் போது, மூளையிலிருந்து வெளியாகும் அலைகளை இந்தச் சிப் கணினிக்கு அனுப்பி, ஒரு மென்மையான ரோபோடிக் கையுறை (Robotic Glove) மூலம் அவர்களின் கைகளைச் செயல்பட வைக்கிறது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனைகளில் 32 நோயாளிகள் இதன் மூலம் 100 விழுக்காடு வெற்றிகரமாகத் தங்கள் கைகளை அசைத்து, உணவு உண்பது மற்றும் நீர் அருந்துவது போன்ற அன்றாடச் செயல்பாடுகளைத் தாங்களாகவே மேற்கொண்டுள்ளனர். இந்தச் சாதனை மருத்துவச் சோதனைகளைக் கடந்து தற்போது சீனாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது (Mass Production). மேலும், இதனைச் சீன அரசாங்கத்தின் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பம் பக்கவாத நோயாளிகளுக்கு மட்டுமன்றி, எதிர்காலத்தில் நடுக்குவாதம் (Parkinson’s) மற்றும் காக்காய் வலிப்பு (Epilepsy) போன்ற நரம்பியல் குறைபாடுகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும் என மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More