48
தமிழக தலைவர்களைச் சந்திப்பதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காவற்துறைப் பாதுகாப்பு மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் எந்தவொரு தரப்பு ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரமாட்டார்கள் என்றும், அதற்கான சூழலை தமிழ் மக்களே உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஈ.பி.டி.பி. கட்சி முன்வைத்த மாற்று அரசியல் கொள்கைகளே நடைமுறைச் சாத்தியமானவை என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாகக் கூறினார். சர்வதேச விசாரணை, சமஷ்டி போன்ற சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து சிலர் சுயலாப அரசியல் நடத்துவதாகவும், மாகாண சபை முறையை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பகிர்வை வலுப்படுத்துவதற்கே இந்தியாவின் முழுமையான அனுசரணை கிடைக்கும் என்றும் அவர் விவரித்தார். மாகாண சபையிலிருந்து ஆரம்பித்து, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதே தங்களது இறுதி இலக்கு என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வலியுறுத்தினார்.
Spread the love

