Home இலங்கை“செம்மணி புதைகுழிப் பருவத்தை ஆராய்ந்தால் குற்றவாளிகளை இனம் காண முடியும்”

“செம்மணி புதைகுழிப் பருவத்தை ஆராய்ந்தால் குற்றவாளிகளை இனம் காண முடியும்”

by admin

  “வரலாற்றுப் பிரசித்தி பெற்ற செம்மணி (Semmani) மனிதப் புதைகுழி விவகாரத்தில் தனியாக அறிவியல் பூர்வமான விசேட ஆய்வு ஒன்றை நடத்தி, எந்தக் காலத்தில் இப் புதைகுழியில் உடலங்கள் புதைக்கப்பட்டன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதன் மூலம், இக் கொடூரங்களைச் செய்த குற்றவாளிகளை உத்தியோகபூர்வமாக இனம் காண முடியும்” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) உயர் மட்டத் தூதுக்குழுவினரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 21) யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்விபரங்களை வெளிப்படுத்தினார்.

இச் சந்திப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மைத் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய வல்லரசு நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவினருடன் இடம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய அவர், கலந்துரையாடப்பட்ட பிரதான விவகாரங்களை ஊடகங்களுக்கு விவரித்தார்.

 “ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேரடியாகச் செம்மணி அகழ்வுத் தளத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். குறிப்பிட்ட எந்தக் காலப்பகுதியில் இப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு உடலங்கள் புதைக்கப்பட்டன என்பதைத் தனியான சர்வதேச ஆய்வூடாக நிர்ணயித்தால், அக்காலப்பகுதியில் குடாநாட்டில் கடமையாற்றிய ராணுவப் பிரிவினர் யார், ஆட்சியில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார் என்பதைத் துல்லியமாக அடையாளம் காண முடியும்.”

இதன் மூலம் படுகொலைகளைச் செய்த உத்தியோகபூர்வக் குற்றவாளிகளைக் கண்டறிந்து, இதனை ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாக (Genocide) சர்வதேசத் தளத்தில் நிர்ணயித்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தூதுக்குழுவிடம் உறைப்பாகக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும்   ஐரோப்பியத் தூதுவர்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ள சி.வீ.கே. சிவஞானம்  “மக்களால் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிர்வாகம் இல்லாததால், வடக்கில் அரசாங்க அதிகாரிகளின் நிர்வாகமே தற்போது நடைபெறுகிறது. எனவே, பழைய தேர்தல் முறையிலேயேனும் மாகாண சபைத் தேர்தலை (Provincial Council Elections) உடனடியாக நடத்துவது இலகுவானதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளோம்.”  எனத் தொிவித்துள்ளாா்.

மேலும்புலம்பெயர் தமிழ் உறவுகளின் முதலீடுகள் வடபகுதிக்குத் தடையின்றி வருவதற்கான சர்வதேச உதவிகளைச் செய்ய வேண்டும். விவசாயம், கடற்றொழில் துறைகளை மேலதிகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த உதவ வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும்   வடபகுதியில் பாரிய சிவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள திண்மக் கழிவு முகாமைத்துவம் (Solid Waste Management) மற்றும் வடிகாலமைப்புப் பிரச்சினைகளை நவீன தொழில்நுட்ப முறையில் கையாள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும், அதற்குத் தூதுக்குழுவினர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

#CVKSivagnanamJaffna2026  #SemmaniGraveScientificStudy #EUDiplomatsJaffnaVisit #NorthernProvincialCouncilElection  #ITAKPoliticalBriefing2026

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More