Home இலங்கை இணைப்பு 2 -இலங்கை நிலவரம் தொடர்பில் ஐ.நா. அவதானத்துடன் இருக்கின்றது – ஜெப்பிரி பெல்ட்மன்

இணைப்பு 2 -இலங்கை நிலவரம் தொடர்பில் ஐ.நா. அவதானத்துடன் இருக்கின்றது – ஜெப்பிரி பெல்ட்மன்

by admin

இலங்கை வந்துள்ள ஐ. நா. வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்பிரி பெல்ட்மன் அவர்களுக்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களுக்குமான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள ஐ . நா அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் உதவிச் செயலாளர் நாயகம் அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த பின்பும்  மக்களின் காணிகளை அரசாங்கமானது மீண்டும் அவர்களுக்கு மீளக்கொடுக்காமல் இருப்பதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்   இக்காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் இக்காணிகளில்  ஆயுதப்படையினர் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுகின்றமையானது எமது மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கின்றமையினையும் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில் காணாமற்போனோர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன்   பல்வேறு ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமர்ப்பணங்களின் அடைப்படையில் 20,000க்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்த அதேவேளை, இவர்களில் அநேகமானோர் ஆயத  குழுக்களுடன்  சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதனையும் தெளிவுபடுத்தினார்.

தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையையே மக்கள் அறிய விரும்புகின்றனர் எனத் தெரிவித்த அவர், அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அறியாத நிலையில் மக்கள் பாரிய மன அழுத்தத்தில் காணப்படுகின்றமையையும், இந்த நிலைமை தொடர முடியாது என்பதனையும் வலியுறுத்தினார். இந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக காணாமற்போனோருக்கான அலுவலகம் விரைவில் நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், இந்தச் சட்டமூலமானது நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தமையைச் சுட்டிக் காட்டினார்.

எனினும் இதனை நீக்குவது தொடர்பில் மிகச் சிறியளவு முன்னேற்றமே காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்   இலங்கை அரசாங்கமானது இந்த விடயம் தொடர்பில் மிகத் தெளிவான ஒரு உத்தரவாதத்தினை ஐ.நா.விற்கு வழங்கியிருந்தமையைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அந்த உத்தரவாதத்திற்கு எதிரான கருத்துக்களைத் தற்போது முன்வைப்பதனையும் எடுத்துக்காட்டினார்.

இலங்கை அரசாங்கமானது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கால தாமதமின்றி இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன்  , கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக விடயங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் உட்பட அனைத்து அரசாங்கங்களும் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பினை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தனர் எனவும் தெரிவித்தார்.

2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதனை அடைந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எமது மக்கள் இந்த விடயம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.  ஆனால், தற்போது இது தொடர்பில் ஒரு தடுமாற்றமான நிலைமை உருவாகியுள்ளது, விசேஷமாக இந்நிலைமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே காணப்படுகின்றது. இவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பைக் குறித்து சிந்திக்கிறார்களே தவிர ஒட்டுமொத்த நாட்டின் நலனைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். இவர்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கருமத்திற்கு தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

கால வரையறையின்றி இந்த விடயங்களில் நாம் காத்திருக்க முடியாது எனவும், தாம் அர்ப்பணிப்புடன் இந்த  விடயத்தில் செயலாற்றுவதாகவும் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டினைப் பிளவுபடுத்தும் தீர்வினைக் கோரவில்லை. மாறாக அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் ஒத்துழைப்போடும் ஒப்புதலோடுமான ஒரு தீர்வினையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் சில்லறைத்தனமான அரசியல் விளையாட்டுக்களைச் செய்து எமது மக்களை மீண்டும் பாதிக்கப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு இவர்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையின் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர், இந்தப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது எனவும் இதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தினைச் சரியாகப் பயன்படுத்தி பிரேரணையை உச்ச பட்சத்தில் நடைமுறைப்படுத்துவதில் தேவையான படிமுறைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தமையினால் அரசாங்கம் கால அவகாசத்தினைக் கோரிய போது நாம் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆய்வு செய்கின்ற போது  தமிழ் மக்கள் நிச்சயமாக திருப்தி அடையவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவின் கருத்துக்களுக்குப் பதிலளித்த உதவிச் செயலாளர் நாயகம்  , இலங்கை நிலவரம் தொடர்பில் ஐ.நா. அவதானத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்விற்கு மாத்திரமன்றி நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்பிற்கும் மிக அத்தியாவசியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நல்லெண்ணங்கள், அடிமட்டத்திலுள்ள மக்கள் மாற்றத்தினை உணர்ந்து கொள்ளும் வகையிலான செயன்முறைகளாக மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்த உதவிச் செயலாளர் நாயகம் அவர்கள், ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது இந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பான அவதானத்துடன் செயற்படும் எனவும்  இலங்கை தொடர்பில் தமது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்களான எம் .ஏ. சுமந்திரன், ரீ..சித்தார்த்தன், செல்வம்  அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் இலங்கைக்கான ஐ. நா. வுதிவிடப் பிரதிநிதி உட்பட ஐ.நா. அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.நா  அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனை   சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Jul 21, 2017 @ 10:56

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜிப்ரி பெல்ட்மன்( Jeffrey Feltman,) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை  இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்ஏ சுமந்திரன், புளொட் தலைவர் சித்தாhர்த்தன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran July 21, 2017 - 1:35 pm

எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தன் எதாவது கோரிக்கைகளை விடுத்துள்ளார? இதற்கு அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஏதாவது வாக்குறுதிகளை கொடுத்தாரா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More