Home இலங்கை மாத்தறை கொள்ளையர்களில் ஒருவர் காவற்துறையால் சுட்டுக்கொலை…

மாத்தறை கொள்ளையர்களில் ஒருவர் காவற்துறையால் சுட்டுக்கொலை…

by admin

மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை நகரில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றையதினம் 7 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பலொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், காவற்துறையினருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சண்டையில் மூன்று காவற்துறை அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்திருந்தனர். இதில், ஒரு காவற்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார.

இந்தநிலையில் காயமடைந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களில் மூவர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான கொஸ்கொட தாரக்க மற்றும் அவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவரும் வைத்தியசாலையில் காவற்துறையினரின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றையதினம் மாத்தறை தாக்குதல் சம்பவத்தின் பின்னர் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது வெயாங்கொட பகுதியில் வைத்து சாமர இந்திரஜித் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்றையதினம் காவற்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் தனது பையில் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் காவற்துறையினரைத் தாக்க முயற்சித்துள்ள நிலையில், செயற்பட்ட காவற்துறையினர் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட வேளை, அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.சாமர இந்திரஜித் என்பவர் அண்மையில் அத்தனகல்லையில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு தானியங்கி துப்பாக்கியும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்று கொஸ்கொட தாரகவின் தாயின் பெயரில் பதிவாகியுள்ள நிலையில் , அவரது தாயாரும் காவற்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

மாத்தறை கொள்ளைச் சம்பவத்துடன் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது இதுவரை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More