Home இலங்கை அரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும் வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை :

அரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும் வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை :

by admin
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவில்  அமைந்துள்ள  வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை  உயர் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதும் குறித்த பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக பாடசாலை மாணவர்களும்,நிர்வாகத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.  வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை  கடந்த 2010 ஆம் ஆண்டின் பின் மீள்குடியேற்ற பாடசாலையாகும். சுமார் 400 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் கலைப்பிரிவுக்கான பாடவிதானங்கள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.
இந்த பாடசாலையானது கடந்த யுத்தகாலத்தில் இருந்ததை விட தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பல பௌதீக மற்றும் அடிப்படை வசதிகள் செய்து முடிக்க வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது.
 சுமார் 150 மாணவர்கள் வகுப்பறை வசதிகளின்றி தற்காலிக கொட்டகைகளிலும் மர நிழல்களிலும் கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளார்கள். அதிபர் அலுவலகம் ,ஆசிரியர் ஓய்வறை , விசேட பாட அலகுகள்  ஒன்று கூடல் மண்டபம் , சிற்றுண்டிச் சாலை , நூலகம் துவிச்சக்கர வண்டிக்காப்பகம், ஆசிரியர் விடுதி போன்ற பல்வேறு தேவைகள் காணப்படுகின்றது.
-தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட எண் சதுர வடிவ வகுப்பறைகள் பொருத்தமானதாக இல்லை.     இப்பாடசாலைக்கான  கட்டிட ஒதுக்கீடுகள் வேறு வளங்களினாலோ அன்மித்த காலங்களில் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் உள்ளடங்களாக தமிழ்   ஆசிரியர்கள் ஐந்திற்கும் மேல் பணியாற்றுகின்றார்கள். இவர்களுக்கான தங்கும் விடுதிகள் கூட இப்பாடசாலையில் இல்லை.
அத்துடன் தகரக் கூரை பொருத்தப்பட்ட தற்காலிக வகுப்பறைகளால் வெப்பம் அதிகரித்து தலையிடி , மயக்கம் ஏற்படுவதாகவும் பாடசாலை நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை வளாகத்தினுள் அடிக்கல் நாட்டுவதற்காக எப்போதோ கொட்டப்பட்டுள்ள கற்கள் , அடித்தளத்திற்கும் சற்று உயரமாக கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டிடங்கள், தகரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகள் , பலத்த காற்றினால் விழுந்து கிடப்பது பாடசாலை சுற்று வேலிகள் இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது.
பல்வேறு அரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும்  பாடசாலை தமது அரசியல் வாதிகளே தமது சமூகத்தின் பின்னடைவிற்கு காரணம் என முசலி மக்களும் பாடசாலை சமூகத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-குறித்த பாடசாலையின் பிரச்சினைகள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் அவர்களிடம் கேட்ட போது,,,,
முசலி வேப்பங்குளம் பாடசாலையில் சில குறைபாடுகளுடன் வகுப்பறைக்கட்டிடங்கள் காணப்படுகின்றமை உண்மை.
 அதற்கான வேலைத்திட்டங்கள்  பூர்த்தியாகியுள்ளது.   அடுத்த மாதம் அளவில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும் .
அங்கு உள்ள அரசியல் தலையீடுகள் பற்றி கருத்து கூறுவது நல்லதல்ல என அவர் தெரிவித்தார்.
Spread the love

Related News

1 comment

Muthupettai News September 11, 2018 - 1:21 pm

அரசாங்கத்தையே நண்பி இருக்காமல், சமூக நல அமைப்புகள் முன் வந்து, உரிய வசதிகளை செய்து கொடுக்கலாமே!!

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More