Home இலங்கை ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மில்ஹானை சி.ஐ.டி. தேடுகிறது..

ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மில்ஹானை சி.ஐ.டி. தேடுகிறது..

by admin


உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்­குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தத் தாக்குதல்களை வழிநடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம்மின் கீழ் செயற்பட்ட குழுவின், ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
மில்ஹான் எனும் குறித்த நபர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றுள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவரது பயணப் பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன. அதன்படி மில்ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மில்ஹான், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை ஆயுதப் படைகளில் இருந்தவர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுணதீவு, காவல் நிலைய உத்தியோகத்தர்கள் கொலையினையும் அவரே நெறிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியன அவை தொடர்பில் சுமார் 68 பேரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றன . அவர்களில் குறித்த தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றை நெறிப்படுத்திய பிரதான சந்தேக நபர்கள் 8 பேர் அடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மட்டக்களப்பு மன்முனைப் பற்று, ஒல்லிக்குளம் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர்கள் கொண்ட விசாலமான இடப்பரப்பைக் கொண்ட இந்த இடம் காவற்துறை மற்றும் காவற்துறை விஷேட அதிரடிப் படையினரின் சிறப்புக் குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முகாம் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரான ரில்வானின் கீழ் இயங்கியதாக கூறப்படுகிறது. ரில்வான் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மெலளானா ரிலா, மற்றும் அவரது சகாவாக கருதப்படும் ஷஹ்னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கும் இலங்கை – இந்தியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணைகளை இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மெற்கொள்வதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #srilanka #eastersundayattacklk #sakaaranhashim #saudiarabia #milhan

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More