Home இலங்கை 1996 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…

1996 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…

by admin


நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் நேற்று (03) விசாரணைக்கு வந்தது.

“இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கின் இடைக்காலக் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீது வரும் 9 ஆம் திகதி ஆட்சேபனை சமர்ப்பணம் இடம்பெறுகிறது. அதனால் உயர் நீதிமன்றின் முடிவைப் பெறுவதற்காக, நீதிவான் நீதிமன்றின் விசாரணையை அன்றைய தினத்துக்கு பின்பான அண்மித்த திகதியில் வழங்கவேண்டும்” என்று பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார்.

மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சாவகச்சேரி நீதிவான் ஜே. கஜநிதிபாலன், வழக்கு வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அழைக்கப்படும் என்று ஒத்திவைத்தார்.

1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ். சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மனுக்களை நெறிப்படுத்தினார்.

2017 ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆட்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆட்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.

எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து சட்ட மா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.

நீதியரசர்கள் புவனகே அலுவிகார, சிசர ஜே டி அப்ரூவ், எஸ். துரைராஜா ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது.

சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் அதிபதி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மனுக்களை விசாரணை நடத்துவதற்காக வழங்கிய இடைக்காலக் கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கட்டளை வழங்கி, தமது மனுவை விசாரணை நடத்த விண்ணப்பம் செய்தார்.

எனினும் பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் சட்ட மா அதிபரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கே மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியும். உயர் நீதிமன்றம் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்து கட்டளை வழங்க நியாயாதிக்கம் இல்லை” என்று சமர்ப்பணம் செய்தார்.

பாதிக்கப்பட்ட உறவுகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் முன்வைக்கும் ஆட்சேபனை தொடர்பில் எழுத்துமூலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனையைச் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது.

அத்துடன், இருதரப்பு சமர்ப்பணங்களையும் வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை முன்வைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற அமர்வு அன்று வரை மனுவை ஓத்திவைத்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More