Home இலங்கை கொரோனாவால் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களை எரிக்க நடவடிக்கை

கொரோனாவால் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களை எரிக்க நடவடிக்கை

by admin

கொரோனா தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் உடல்களை , அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் பொறுப்பேற்காவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொறுப்பேற்கப்படாத சில உடல்கள், வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கிக்கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவ்வாறான சடலங்களை, சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய, உடனடியாக அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான செலவுகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்,  சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுக்கள் தள்ளுபடி

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழுவின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு அமைய குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களின் பரிசீலனை கடந்த இரு தினங்களாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெனாண்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் நேற்றையதினம் பரிசீலிக்கப்பட்டபோது, கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களில் இருந்து வைரஸ் பரவியதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என, மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான, எம்.ஏ. சுமந்திரன், பைஸர் முஸ்தபா, சாலிய பீரிஸ், நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தீர்ப்பை அறிவித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மூன்று நீதிபதிகள் கொண்ட குழாமின் பெரும்பான்மையினரின் முடிவுக்கு அமைய, இவ்வனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக, திறந்த நீதிமன்றில் அறிவித்தார். #கொரோனா #உயிரிழந்த #அடையாளம்தெரியாத #அனர்த்தமுகாமைத்துவநிலையம் #தகனம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More