Home இலங்கை தனியார் துறைக்கு அஸ்ட்ராசெனகா கிடைக்காது

தனியார் துறைக்கு அஸ்ட்ராசெனகா கிடைக்காது

by admin



கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் தனியார் துறையின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

 அஸ்ட்ராசெனகாவின், ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சந்தைப்படுத்த பல தனியார் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதை அறிந்துகொண்டுள்ளமையால் தான் இந்த கடிதத்தை அனுப்புவதாக ஜோஸ்பர் மெயின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கும் சர்வதேச சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதை இந்த நேரத்தில் எங்கள் நோக்கமான காணப்படுகின்றது என்பதை  நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த தடுப்பூசியை தற்போது தனியார் துறைக்கு வழங்கவோ, விநியோகிக்கவோ நடவடிக்கை எடுக்கப்போவது இல்லையென, அஸ்ட்ராசெனகாவின், ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறை குறித்த தடுப்பூசியை விநியோகிப்பதாக வெளியாகும் விளம்பரத்தையும்  அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

அவர் தனது கடிதத்தில் “அஸ்ட்ராசெனகாவைத் தவிர வேறு எந்தவொரு வர்த்தக நிறுவனமும், தனியார் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மேற்கொண்டால், அது போலியான தடுப்பூசியாக இருக்க வாய்ப்புள்ளது, இதுபோன்ற சந்தர்ப்பத்தில் குறித்த தடுப்பூசியை நிராகரிக்க வேண்டுமென்பதோடு, அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

கோவாக்ஸ் திட்டம், யுனிசெப் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா ஆகியவை மாத்திரமே இலங்கைக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.  

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களிலிருந்து கொரோனா தொற்று அதிகமாக பதிவாகி வருவதால், உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே அடுத்த முன்னுரிமை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா சுட்டிக்காட்டியிருந்தார்.

“இலங்கையில் பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையில் பதிவாகின்றன. எங்கள் அடுத்த முன்னுரிமை உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக இருக்க வேண்டும். தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஒப்புதலுக்கு உட்பட்டு தனியார் துறை தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.” என அவர் தெரிவித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More