Home இலங்கை யாழில் கடந்த இரண்டு கிழமைகளில் 775 பேர் டெங்கு – கடந்த மாதம் 5 பேர் உயிரிழப்பு!

யாழில் கடந்த இரண்டு கிழமைகளில் 775 பேர் டெங்கு – கடந்த மாதம் 5 பேர் உயிரிழப்பு!

by admin

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு கிழமைகளில் மாத்திரம் 775 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதேவேளை கடந்த டிசம்பர் மாதம் யாழில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

வடமாகாண மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில்,

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் 3986 டெங்கு நோயாளர்களே பதிவாகியதுடன் ஆறு மரணங்களும் பதிவாகியது. இதில் ஐந்து கடந்த டிசம்பர் மாதத்திலே பதிவாகியுள்ளது.

யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தம்மால் இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
எனினும், பொதுமக்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதில்லை

தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காத 1542 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 147 இடங்கள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களை விட படித்த சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களிலே சூழல் பாதுகாப்பு மிக மோசமாக காணப்படுகிறது என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூழலை சுத்தமாக பேணாது நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுங்கள். இந்த செயற்பாடுகளுக்கு பொலிசாரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுங்கள். வீதிகளில் பொதுவான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதனை உரியவாறு பராமரியுங்கள்.

இவ்வாறான செயற்பாடுகளில் பொதுமக்களை உள்வாங்கி உள்ளுராட்சி நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணித்தார்.

இதேவேளை பொதுமக்களும் சமூக பொறுப்புக்களை உணர்த்து செயற்படுவது இன்றியமையாததொன்றென ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More