Home இலங்கை வெருகல் பாலத்தில் மறிக்கப்பட்ட பேருந்து, திருமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டது!

வெருகல் பாலத்தில் மறிக்கப்பட்ட பேருந்து, திருமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டது!

by admin

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து சென்றவர்களை காவற்துறையினரும்,  மற்றும் பாதுகாப்புப்படையினரும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பேருந்து ஒன்றில்  சென்றவர்களை வெருகல் பாலத்திலுள்ள காவற்துறைசேதனைச்சாவடியில் வழிமறித்த காவற்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் பேருந்து பற்றுச்சீட்டுக்களை கேட்டதாகவும் பின்னர் அவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பேருந்தையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், காவற்துறையினர் அனைவருடைய விபரங்களும் பெறப்பட்டுள்ளதோடு மற்றும் பேருந்தின்  சாரதி, நடத்துனரின் ஆவணங்களையும் காவற்துறையினரால் பறித்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திரும்பிச்செல்லாவிட்டால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் பயமுறுத்தியதோடு புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத் தொலைபேசியை வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பேருந்து  மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பேருந்தில்  பயணம் மேற்கொண்டிருந்தனர். இதில் 43 பெண்களும் 10 ஆண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More