Home உலகம் சீன ஆய்வுக் கப்பல், மாலைதீவில் நங்கூரமிட்டது!

சீன ஆய்வுக் கப்பல், மாலைதீவில் நங்கூரமிட்டது!

by admin

இலங்கை கடலில் (Sea Of Sri Lanka), பிரத்தியேகமாக பொருளாதார வலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீன ஆய்வுக் கப்பல் நேற்று (22.02.24) மாலைத்தீவுகளை சென்றடைந்தது.

இலங்கை வலய எல்லைக்குள் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னரே சீன ஆய்வுக் கப்பல் மாலைத்தீவுகளை சென்றடைந்தது.

இலங்கை நேரப்படி நேற்று (22.02.24) மாலை 3.30 மணியளவில் Xiang Yang Hong 3 கப்பல் மாலைத்தீவுகளின் மாலே நகருக்கு அண்மையிலுள்ள கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையிலுள்ள பொருளாதார வலய எல்லையில் ஒரு மாத காலம் தங்கியிருந்து குறித்த கப்பல் மாலைத்தீவுகள் நோக்கி நேற்று பயணத்தை ஆரம்பித்தது. இந்த நிலையில், மாலைத்தீவுகளின் கடல் வலயத்தினுள் இன்று அதிகாலை கப்பல் பிரவேசித்துள்ளது.

Xiang Yang Hong 3 சீன ஆய்வுக் கப்பலினால் இலங்கை தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் இடம்பெற்ற இராஜதந்திர கலந்துரையாடலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சீன ஆய்வுக் கப்பல், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வருகை தருவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியா, இலங்கை மீது அழுத்தம் விடுத்ததுடன், சீன கப்பல் இரட்டை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டது.

இவர்கள் சேகரிக்கும் தரவுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை செயற்படுத்தல் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியது.

இந்த பின்புலத்திலேயே அனைத்து நாடுகளின் ஆய்வுக் கப்பல்களும் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.

எனினும், இலங்கை குறித்த தடையை விதிக்கும் போதும், சீன அரசாங்கம் Xiang Yang Hong 3 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக அனுப்ப எழுத்து மூலம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு கப்பல் தயாராக இருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.

இதனடிப்படையில், சீனாவில் இலிருந்து கடந்த மாதம் 16ஆம் திகதி இந்து சமுத்திரத்தை நோக்கி புறப்பட்ட சீன கப்பல், இலங்கைக்கு பதிலாக மாலைத்தீவுகளை தனது பயண இலக்காக தெரிவு செய்திருந்தது.

கடந்த 8 ஆம் திகதி மாலைத்தீவுகளை சென்றடைவதாக அறிவித்திருந்த போதிலும், அவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்த பகுதியில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் என்பதுடன், Xiang Yang Hong 3 அந்த எல்லையை சுற்றிச்சென்று ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இலங்கை, சீன கப்பலுக்கு அனுமதி மறுத்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பை சென்றடைந்தமையுடன் கடற்படை மரியாதையின் மத்தியில் வரவேற்கப்பட்டமை இந்தியாவின் வெற்றி என இந்திய ஊடகம் தெரிவித்திருந்தது.

இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் வெற்றியல்ல, இந்தியாவுக்கு வெட்கக்கேடானது என சீன ஊடகம் இதற்கு பதிலளித்துள்ளது.

இதனிடையே, Xiang Yang Hong 3 கப்பல் தமது கடல் எல்லையில் எவ்வித ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை என்பதுடன், விநியோக நடவடிக்கைக்காக வருகை தந்துள்ளதாக மாலைத்தீவுகள் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More