Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது!

ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது!

by admin

ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், அந்தக் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் செயற்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் ஒன்றிற்கு அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் இதுவரையில் யாருக்கும் வழங்கப்படவில்லை.

கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அக்கட்சியின் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர்களை தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த தாமதத்திற்கான காரணமாகும்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேசியப் பட்டியலில், சுதந்திர மக்கள் காங்கிரஸின் டலஸ் அழகப்பெரும, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாகரன் விஜயேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிஷாம் காரியப்பர் ஆகிய வேட்பாளர்கள் மூன்றிலிருந்து ஐந்தாம் இடம் வரையில் உள்ளனர்.

அந்த பட்டியலில் முதல் இரண்டு வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆவர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்த படி ஏனைய கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More