Home இலங்கை யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்

யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்

by admin

 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

எவ்வளவு விரைவாக இதனை மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அது தொடர்பில் இந்தியத் துணைத்தூதுவர் கருத்து வெளியிடுகையில்,

இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை என்றும் அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ, அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும் என்றும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது சாதகமானதொரு நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார்.கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாஸ், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ;ணேந்திரன் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More