149

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் கூட்டத்திற்கு செல்லவில்லை என கூறி இளைஞன் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் மனிதாபிமானற்றமுறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மருதங்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை. அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற காவல்துறையினர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால் , தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என காவல்துறையினருக்கு பதில் அளித்துள்ளார்.
காவல்துறையினர் அழைத்தால் காவல் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, தர்க்கப்பட்டுள்ளனர். அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினரிடம் கோரிய போது , காவல்துறையினர் மகனுடன் முரண்பட்டுக்கொண்டனர்.
பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது மனிதாபிமானமின்றி இளைஞனை காவல்நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.
மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து காவல்துறையினர் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்


Spread the love