தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பில் மட்டும் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது எனத் தொிவித்துள்ளாா். .
பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனத் தொிவித்த அவா் சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் எனவும் அவை தொடர்பில் விசாரிக்கப்படுவதுடன் அது தொடா்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா் .
சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்து வருகிறது எனவும் உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவா் தொிவித்துள்ளாா். .
சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ , பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்