115
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை , பிமல் ரத்னாயக்க உரையாற்றுகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி கசிப்பும், பணமும் வழங்கியே தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில், பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சாத்வீக கட்சி மாத்திரமில்லை, சமூக அக்கறையுள்ள கட்சியுமாகும். 75 ஆண்டுகளுக்கு மேலான தமிழ் அரசுக் கட்சியின் வரலாற்றை அமைச்சர் பிமல் எடுத்துப் பார்க்க வேண்டும்.
மது ஒழிப்புக்காக இயக்கங்களை கொண்டுள்ளதுடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
அதனால் தான் மதுபான சாலைகளை புதிதாக அமைப்பதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் நீதிமன்றங்கள் ஊடாக அவற்றை தடுக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவான மூன்றாம் நாள் அமைச்சர் பிமல் தெரிவித்திருந்தார், முன்னைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியல் சலுகையாக வழங்கியிருந்த மதுபான அனுமதிப் பத்திரங்களுக்கான சிபார்சினை, வழங்கியிருந்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவோம் என, ஆனால் இன்னும் அதனை வெளியிடவில்லை. யார் மீதான பயத்தினால் 6 மாதங்கள் கடந்தும் அதனை அவர் வெளியிடவில்லை.
தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை சகிக்க முடியாமல் அவர்களது உணர்வுகளை அவமதித்து பிழையான சாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைச்சரின் கருத்து அவரது சிறுமையை வெளிப்படுத்துகிறது.
தமிழ் அரசுக் கட்சி மீதான இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றுக்கு வெளியில் ஆதாரங்களுடன் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love