Home இலங்கைஅல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்!

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்!

அவதூறு பரப்பப்படுவதாக கவலை!

by admin
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.
காவற்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவற்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அது தொடர்பில் 10ஆம் திகதி காவற்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன.
அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ?
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவற்தறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம்.
இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார் கவலை!
எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார்.
காவற்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான்.
அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவற்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன என வீட்டார் தெரிவித்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More