137
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொசாட்’ (Mossad) நிறுவனத்திடம் 1 மில்லியன் டொலர் நிதியுதவி கோரியதாக அண்மையில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ இரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1980-களின் முற்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தபோது, “தமிழ் பயங்கரவாதப் பிரச்சினை” என அப்போது வர்ணிக்கப்பட்டதை எதிர்கொள்ள இஸ்ரேலின் இராணுவ உதவியை இலங்கை நாடியுள்ளது.
1984-ஆம் ஆண்டில் கொழும்பில் இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவு (Israeli Interests Section) தொடங்கப்பட்டது. இஸ்ரேலிய பயிற்றுவிப்பாளர்கள் “விவசாய ஆலோசகர்கள்” என்ற போர்வையில் இலங்கையில் தங்கியிருந்து, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு (STF) பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தனது தேர்தல் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவியை இஸ்ரேலியப் பிரதிநிதிகளிடம் கோரியதாக ஒரு இராஜதந்திரக் குறிப்பு தெரிவிக்கிறது. தான் பதவியில் நீடித்தால் இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டதாகத் தெரியவருகிறது.
இதேவேளை ரோந்துப் படகுகள், நவீன ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கியதும் இந்த ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், கோரப்பட்ட அந்த நிதி இறுதியாக வழங்கப்பட்டதா என்பது குறித்து இந்த ஆவணங்களில் தெளிவான தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

