144
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா அமீரகத்தில் அமைந்துள்ள ‘டூ’ (du) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டடம் ஒன்றின் மீது இன்று (ஏப்ரல் 6, 2026) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமீரக அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் குறித்து புஜைரா ஊடக அலுவலகம் (Fujairah Media Office) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தொலைத்தொடர்பு வசதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தளர்த்தப்பட்டு, அப்பகுதியில் வழமையான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்புடன் ஈரானுக்கு நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து ஈரான் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக புஜைராவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளிலும் இவ்வாறான தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருந்தன.
Spread the love

