44
ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவத்திற்கான ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைக்கலன்களை விநியோகிக்கும் பிரிவின் உயர் அதிகாரியான கேர்ணல் டாமிர் தவீடோவ் (Col. Damir Davydov), மாஸ்கோவிற்கு அருகில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மொஸ்கோ பிராந்தியத்தின் பாலாஷிகா (Balashikha) பகுதியில் உள்ள அவியேட்டரோவ் இராணுவக் குடியிருப்பு வீதியில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தவீடோவ் தனது ‘பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ (BMW X3) ரக வாகனத்தை வாகன நிறுத்தத்திலிருந்து எடுக்க முயன்றபோது, அதன் ஓட்டுநர் ஆசனத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) வெடித்துச் சிதறியுள்ளது. சுமார் 400 கிராம் டிஎன்டி (TNT) வெடிமருந்துக்கு இணையான சக்தியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பின் போது பலத்த காயமடைந்த 57 வயதான கேர்ணல் தவீடோவ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கியது முதல், ரஷ்ய எல்லைக்குள் இராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியப் பொறுப்பதிகாரிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர் நிழல் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பு இதுவரை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. அதேவேளை, நேட்டோ (NATO) அமைப்பினால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ரஷ்ய அமைச்சர் ஒருவர் அண்மையில் எச்சரித்திருந்த பின்னணியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், ரஷ்யாவின் வங்கி மற்றும் கிரிப்டோ நெட்வொர்க்குகள், ட்ரோன் உற்பத்தி மற்றும் எண்ணெய் வர்த்தகர்களை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 21ஆவது தடாலடிப் பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்துள்ள நிலையில், மாஸ்கோவின் பாதுகாப்புப் வளையத்திற்குள் புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ரஷ்ய இராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

