53
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2026) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நேற்று சனிக்கிழமை இதனைப் பதிவிட்ட அவர், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கப்படும் என்றும், ஈரான் இனி அணு ஆயுதங்களை நாடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தன்னிடம் மாற்று இறுதி வழிமுறை உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான இடைஸ்திரப் பணிகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்முறை (Electronic signing) மூலமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei), அமெரிக்கத் தரப்பின் தயக்கம் காரணமாக உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும், வரும் நாட்களில் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தல், அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் ஆகியன இதில் அடங்குவதாக ஈரான் தரப்பு கூறினாலும், ஈரானுக்கு எந்த நிதியும் வழங்கப்பட மாட்டாது என்றும், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழலில், ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரப்போக்குடைய ஈரானியர்கள் சனிக்கிழமை போராட்டங்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

