Home இலங்கைமுன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

by admin

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், அத்மிரல் ஒப் த ப்ளீட் (Admiral of the Fleet) அந்தஸ்து கொண்டவருமான வசந்த கரன்னாகொட, இன்று (03) முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் அவருக்கு முறைகேடாகப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கியமை தொடர்பான பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தான விசாரணைக்காக அவர் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த விசேட கைது நடவடிக்கை ஆணைக்குழு வளாகத்தினுள் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தபோது, அதற்கான அடிப்படை மற்றும் தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை, நடைமுறைகளை மீறி நிறைவேற்றுப் பிரிவின் அதிகார உத்தியோகத்தராக இணைத்துக் கொண்டமைக்கு வசந்த கரன்னாகொட ஒத்துழைப்பு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அன்றைய விதிமுறைகளுக்குப் புறம்பாக, பெருமளவிலான அரசாங்கப் பணத்தைச் செலவழித்து (Misappropriation of Public Funds) பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் (Britannia Royal Naval College) விசேட பயிற்சிப் பாடநெறியொன்றில் யோஷித ராஜபக்ஷ கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமையும் இவருக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாகும்.

 

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஜூன் 16 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அழைப்பாணை கிடைக்கவில்லை எனக் கூறியும், பின்னர் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவைக் காரணம்காட்டியும் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதேவேளை, இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ, கடந்த ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று தனிப்பட்ட பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews #CIABOC #WasanthaKarannagoda #YoshithaRajapaksa #ColomboCourt #SriLankaNavy #lka

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More