Home இலங்கையோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

by admin

 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை நீக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த மனுவை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

  கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வருமானம் ஈட்டியதற்கான சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை, மூன்று தனியார் வங்கிகளின் நிலையான வைப்புக் கணக்குகளில் (Fixed Deposits) வைப்புச் செய்துள்ளார் என யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளார் எனக் குறிப்பிட்டு சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கில் தனக்கு எதிராகச் சேர்க்கப்பட்டுள்ள “சதி” (Conspiracy) என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பராமரித்துச் செல்ல முடியாது என மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியே யோஷித ராஜபக்ஷவினால் இந்தச் சீராய்வு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்வதாக இன்றைய திகதியில் அறிவித்துள்ளது.

#YoshithaRajapaksa #MahindaRajapaksa #CourtOfAppeal #MoneyLaunderingAct #SriLankaNews #LankaPolitics #ColomboCourt #SriLankaJudiciary #BreakingNewsLK #lka

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More